Jul 11, 2017

‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை


என்னங்க 'நாய் நாகராஜனோட அடி  மனசுக் குமுறல்களை மட்டும் தான் பிரசுரிப்பீங்களா ?எங்களேட கஷ்ட நஷ்டங்களையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க' என்று கரைகிறார் "காக்கா" கந்தசாமி. 



ச்சே! என்ன வெயில்.... கிடைக்கிற கொஞ்ச தண்ணியில (அட டாஸ்மாக் தண்ணி இல்லை, கார்ப்பரரேஷன் தண்ணிங்க) ஒரு 'காக்கா'க் குளியல் போட்டுட்டு, வேப்பமரக்கிளையில உட்கார்ந்து கண்ணசந்தா, கீழ குத்த வச்சு உக்கார்ந்து, ஆடு புலி ஆட்டம் விளையாடுற தண்டச்சோறுங்க ஏதோ காரசாரமாக விவாதிச்சுட்டு இருந்தாங்க. என்னன்னு ஒரு பக்கமா தலைய சாய்ச்சு கேட்டா, "காக்கா 'கா கா'ன்னு கத்துறதால அதுக்கு காக்கான்னு பேர் வந்துச்சா? இல்லை, எல்லோரும் காக்கான்னு கூப்பிடறதால காக்கா "கா கா"ன்னு கத்துதா?ன்னு" ஒரே விவாதம் என்ன ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி? நாங்களெல்லாம் ஒரே மாதிரி "கா கா"ன்னு தான் கத்துறோம், ஆனால் ஒற்றுமையா வாழுறோம். ஆனால் இந்த மனுஷங்க தான், ஒவ்வொரு ஊரிலயும் ஒவ்வொரு மொழியில பேசிக்கிறாங்க. அந்த பாகுபாட்டினால, தண்ணி கொடுக்க மாட்டேங்கிறாங்க, அடிச்சுக்கிறாங்க. நாங்க ஏதாவது கேட்கிறோமா?

எங்களை மாதிரி சுறுசுறுப்பான ஜீவராசி எதுவும் கிடையாதுங்க. காலங்கார்த்தால கரைஞ்சுக்கிட்டே எழுந்திருச்சோம்னா, சாயங்காலம் வரை நாங்க ரொம்ப பிஸி. ஜல்லிக்கட்டு பார்க்கிற "விருமாண்டி" கமல் மாதிரி ஸ்டைலாக கரண்டு கம்பத்துல ஊஞ்சலாடிட்டு, தலைவர்கள் சிலைகள் மேல அசிங்கம் பண்ணிட்டு சந்தோஷமா வளைய வருவோம். வேலைவெட்டி இல்லாத பறவைங்கதான், பார்த்துப் பார்த்து தங்கள் கூடுகளை வடிவமைச்சு கட்டுங்க. நாங்களா, கிடைக்கிற குச்சி, தகரங்கள வச்சு ஒரு கூடு கட்டி "பாய்ஸ்" ஹீரோ, ஹீரோயின் போல "கொட்டாங்குச்சி கூடு போதும் நம் காதல் வாழும்; தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்"ன்னு ஜாலியா பாடுவோம். 

குயில் எங்களை மாதிரி கறுப்பு தான். ஆனால் அதோட குரல் இருக்கே, அதனால அதுக்கு மனுஷங்க மத்தியில நல்ல பேரு. நாங்க 'கா கா'ன்னு கரைஞ்சா கல்லடி தான் கிடைக்கும். ஆனா பாருங்க அழகான குரல் இருக்கிற இந்த குயிலுக்கு ஒரே இடத்துல உட்கார்ந்து முட்டைய அடைகாக்கும் அளவுக்கு பொறுமை கிடையாது. அதனால நைஸா எங்க ஆளுங்களோட கூட்டில முட்டையை வச்சுட்டு போயிடும் இந்த கேடி குயில். எங்க ஆளுங்களும் பொறுப்பா தாலாட்டு கத்தி, அடை காப்பாங்க. நம்ம வாரிசுங்க கூட பொறிச்சு வர குயில் குஞ்சு நாராசமா "கூ கூ"ன்னு கூவும் பாருங்க. அப்ப தான் காக்கா இனத்தை Surrogate mother ஆக்கி குயில் ஏற்கனவே கறுப்பான எங்க முகத்தில கரி பூசுனது தெரியும். 

இந்த மனுஷங்க ஒற்றுமைக்கும், உணவைப் பகிர்ந்து சாப்பிடுவதற்கும் எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க. ஆனால் உண்மையில நாங்க ஏன் உணவை சாப்பிடறதுக்கு முன்னாடி, மற்ற காக்காவையெல்லாம் கூப்பிடுறோம்ன்னா, இந்த மனுஷங்களை நம்பவே முடியாது. சாப்பாட்டில விஷம் ஏதாவது கலந்து வச்சாலும் வச்சிருப்பானுங்க. அதுக்குத்தான் ஒரு கூட்டத்தைக் கூட்டி, ஒரு இளிச்ச வாய் காக்கா, சாப்பிட ஆரம்பிச்சு, அதுக்கு ஒண்ணும் கலைன்னு தெரிஞ்சுட்டு நாங்க சண்டை போட்டு சாப்பிட ஆரம்பிப்போம். அந்தக் காலத்துலயே இந்த மனுஷனுக்கு எங்க மேல என்ன காண்டுன்னு தெரியல, புராணத்துக் கதைகள், ராமாயணம் எல்லாத்துலயும் எங்களுக்கு 'நெகட்டிவ் ரோல்' தான் கொடுத்திருக்காங்க. நல்ல வேளை, எங்களை சனீஸ்வரனின் வாகனம்னு ஏத்துக்கிட்டதாலயும், நாங்களெல்லாம் அவர்களோட முன்னோர்கள்ன்னு நம்புவதாலயும், நமக்கு ப்ரேக்·பாஸ்ட் பிரச்சனை இல்லை.

ஒன்னு கவனிச்சிங்களா? மனுஷங்க புறா, கோழி, கிளி எல்லாம் வளர்ப்பாங்க. ஆனால் யாரும் காக்கா வளர்க்க மாட்டாங்க. ஏன்னா, மனுஷன் இன்னொரு மனுஷனத்தான் காக்கா பிடிக்க முடியுமே தவிர "காக்கா"வைப் பிடிக்கிறது ரொம்பக் கஷ்டம். ஹா! மாடி வீட்டு மாமி, வடாம் காய வைக்க வராங்க. நான் போய் அவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு, வடாம் சாப்பிடணும். வரட்டா!

- My article published in Nilacharal.com 

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Laundry Detergent Coupons