பொதுவாகவே பேட்டிகளில் வைரமுத்துவைப் பற்றி இளையராஜாவோ, ராஜாவைப் பற்றி வைரமுத்துவோ பேசுவதை தவிர்த்து விடுவார்கள்.
ஆனால் சமீபகால பேட்டி ஒன்றில் ராஜாவைப் பற்றி கேட்ட போது, வைரமுத்து இந்த வயதிலும் அவரது இசை வியப்பூட்டுகிறது என்றார். "சுப்ரமணியபுரம்", "வாரணம் ஆயிரம்" போன்ற பீரியட்??!! படங்களில், 80கள் காலத்திய காட்சிகளில் ராஜாவின் இசை தவிர்க்க முடியாத ஒரு பின்புலமாகிறது. "இப்போதுள்ள இசையமைப்பாளர்களில் யார் உங்களைக் கவர்ந்தவர்?" என்று பவதாரிணி தொலைக்காட்சிக்காக தன் தந்தையை பேட்டி எடுக்க, "நானும் இப்போதுள்ள இசையமைப்பாளன்" தான் என்ற பதிலே, அவரது 66 வயதையும் தாண்டி எப்படி அவரும் அவர் இசையும் contemporary யாக உள்ளனர் என்பதற்கு சாட்சி. இப்போது பிரபலமாக உள்ள இசையமைப்பாளர்களின் வயதை விட இளையராஜாவின் திரைஇசை அனுபவம் அதிகம்.
ஏறத்தாழ 35 ஆண்டுகளாக அவரின் இசை நம் கண்ணுக்கு புலப்படாத காற்று போல எங்கும் காற்றலைகளில் வியாபித்துள்ளது. எந்த ஒரு நாளும், எந்த ஒரு எப்.எம் ரேடியோ அலைவரிசையோ, தொலைக்காட்சி சேனலோ ராஜாவின் பாடல்களை ஒலி/ஒளிபரப்பாமல் இருக்கவே முடியாது. அர்த்தராத்திரியில் ஆம்னி பஸ் ஒதுங்கும் ஊர் பேர் தெரியாத உணவு விடுதியிலோ, ஏதோ ஒரு கிராமத்து டீக்கடையிலோ, மினி பஸ்ஸிலோ, உங்கள் iPodஇலோ ராஜா உங்களை வந்தடைந்து கொண்டு தானிருக்கிறார், இருப்பார்.
நான் இந்த மண்ணில் பிறப்பதற்கு 5 ஆண்டுகள் முன்பே தமிழ்த்திரையில் ஊற்றெடுத்துப் பொங்கிய இசைப் பிரவாகம், இன்றும் தொடர்ந்து , என் "விரைவில்" பிறக்கவிருக்கும் சிசுவை ஆட்டுவிக்கிறது என்பதை நினைத்தால் புல்லரிக்கிறது. ஆமாம். "நான் கடவுளின்" 'மாதா உன் கோவிலில்" பாடல் ஒலிக்கும் போதெல்லாம் சிசுவின் அசைவு அதிகமாக இருப்பதாக என் மனைவி கூற , நானும் அதனை உணர்ந்து வியக்கிறேன்.( சாதனா சர்க்கத்தின் "அம்மா உன் பிள்ளை" version க்கு எந்த ஒரு அசைவும் இருக்காது; மதுமிதா குரல் தான் பிடிக்கிறது போலும் :-) )
பொதுவாக மக்கள் 50 - 60 வயதுகளில், கடமைகள் முடித்து, பணம் கரைந்து, வியாதிகள் கூடி வரும் போது தான் ஆன்மீகம் பக்கம் திரும்பி, கோவில்,குளம், காசி, ராமேஸ்வரம் என்று அலைந்து பின் ஒரு விதமான Low-profile வாழ்க்கை முறைக்கு வந்து விடுவார்கள். ஆனால், நம் ஆளோ, பணமும் புகழும் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டிக்கொண்டிருந்த போதே, இசையோடு ஆன்மீகக் கடலிலும் மூழ்கி முத்தெடுத்தவர். இந்த 66வது வயதில், மிஷ்கினோடு பயணம் போகிறார், பாலாவுடன் கைகோர்த்து உடுக்கை ஓசையில் மிரட்டுகிறார், ஒரு பக்கம் காந்தியடிகளின் பாடலுக்கு பஜன் வடிவம் கொடுக்கிறார், ஒரு பக்கம் ஐயப்பனுக்கு கீதமாலை சூடுகிறார், Warner bros தயாரிக்கும் இந்திப் படம், அமிதாப்பின் படம் என பாலிவுட்டில் பாய்கிறார், மலையாளம், தெலுங்கும் கன்னடம் என பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைக்கிறார். இந்த மனிதர் என்றைக்குமே இசைக்காக மெனக்கெடுவதில்லை, இசை இவரது உடலின் ஒவ்வொரு செல்லிலும், ரத்த அணுவிலும் பதிந்துள்ளது. பாடலோ, காட்சியோ அதற்குத் தகுந்தபடி அவர் சிந்தையிலிருந்து ததும்பி வந்து, நம் காதுகளை நிரப்புகிறது. கண் மூடிக் கேளுங்கள் "நந்தலாலா"வின் 'மெல்ல ஊர்ந்து ஊர்ந்து' பாடலை, ஒரு பயணத்தின் சூழலை கண் முன் கொண்டு வரும். "பிச்சைப் பாத்திரம்" பாடல் கேட்போரை என்னமோ செய்து உயிரை அறுக்கிறது என்பதை மறுப்பவர் கிடையாது.