தற்சமயம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் பாடல்களை கவனித்தீர்கள் என்றால், அப்பாடல்களின் இசையமைப்பாளர்கள் அவற்றை கருவாக்கி ??!! உருவாக்கி, மெருகேற்றி, கண்(காது) கவர் பேக்கிங்கில் வெளியிட்டுருப்பார்கள். எவ்வளவுக்கெவ்வளவு பாடல்கள் எஃப். எம். கள், டீ.வி சேனல்களிலும் CD தேயும் வரை ஒலி/ஒளிபரப்பப்படுமோ, அவ்வளவு ஹிட் என்பது கணக்கு. சென்ற ஆண்டில் வெளி வந்து பாப்பா முதல் பாட்டி வரை கவர்ந்த "வாரணம் ஆயிரம்" பாடல்களை எடுத்துக் கொள்வோம். இப்படத்தின் பாடல்களை, எந்த ஒரு இளமை ததும்பும் காதல் படத்திற்கும் உபயோகப்படுத்தலாம்.
ஒலிநாடா / CD விற்பனையை கருத்தில் கொண்டு அவசர கதியில் உருவான Fast food பாடல்கள் கொண்ட ஆல்பங்கள் வாரந்தோறும் வெளியாகிக்கொண்டிருக்க,
பாடல் இடம்பெறும் படத்தின் கதையை உள்வாங்கி, கதைக்கரு மற்றும் சூழலுடன் ஒன்றி வெளிவரும் Soundtrack தமிழில் மிகக் குறைவே. அக்குறையை போக்க புத்தாண்டில் புத்துணர்வு பொங்க வெளிவந்திருக்கிறது "நான் கடவுள்" படத்தின் பாடல்கள்.
அன்னக்கிளி தொடங்கி இன்று வரை ஆச்சு 33 வருடங்கள். ஆனாலும், மனதை ஊடுருவும் இசையை அளிப்பதில் 'தான் கடவுள்' என்பதை மீண்டும் ஒரு முறை கம்பீரமாக நிரூபித்திருக்கிறார் ராஜா.
'நான் கடவுள்' படப்பூஜையின் போது (ஏறத்தாழ 2-3 வருடங்களுக்கு முன்), ஒரு நிருபர் பாலாவிடம் இந்தப்படத்துக்கும் இசை ராஜா தானா ? எனக் கேட்க, சற்றும் தாமதமின்றி வந்து விழுந்தது பதில். "என் படத்துக்கு அவரை விட்டால் யாரால் இசை அமைக்க முடியும்" என்று. அந்த பத்திரிக்கை நிருபர் கேட்க வேண்டும் 'நான் கடவுள்' பாடல்களை.
தன் பாடல்களை இளைய மகன் தொடங்கி, இமான் வரை முரட்டுத்தனமாக ரீ-மிக்ஸ் செய்து கொண்டிருக்க, அச்சாணி படத்திற்காக எஸ்.ஜானகி பாடிய "மாதா உன் கோவிலில்" பாடலை மீண்டும் புதிய வர்ணம் பூசி "அம்மா உன் பிள்ளை" என்ற பாடலாக தவழ விட்டுருக்கிறார். ராஜா செல்லமாய் "சாது" என்று அழைக்கும் சாதனா சர்க்கம் பாடியிருக்கும் இப்பாடல் கேட்டவுடனே 'பச்சக்' என்று மனதில் Fevikwik போட்டு ஒட்டிக்கொள்ளும் ரகம். பழைய ஜானகி versionஓடு ஒப்பிடாமல் கேட்டால் இது ஒரு அக்மார்க் ராஜா தாலாட்டு. பாடலின் இன்டெர்லூட்களில் என்ன நடக்குமோ என்ற ஆர்வத்தை தூண்டுமாறு, கதையின் ஓட்டத்திற்கேற்ற மர்ம இசை முடிச்சுகளை போட்டிருக்கிறார் ராஜா. இணைந்தே இருக்கும் இமயங்கள் ராஜா-வாலியின் கூட்டணியில், வாலியின் பேனா கசிந்துருகி பாடல் வரிகளை பிரவாகித்துள்ளது.
"மாதா உன் கோவிலில்" என்ற வரிகளுடனேயே இப்பாடல் மதுமிதா குரலில் வேறு தாளக்கட்டோடு 42 நொடிகள் மட்டுமே வந்து போகிறது.
மனதை என்னவோ செய்யும் சாரங்கி இசையோடு துவங்கி கேட்போரை அந்தரத்தில் மிதக்க வைக்கும் மெட்டு, பின்னணி இசை கொண்ட பாடல் "கண்ணில் பார்வை". ஷ்ரேயா கோஷல் என்ன புண்ணியம் செய்திருக்கிறாரோ, ராஜா அவருக்கு எப்போதுமே சிறந்த பாடல்களைப் பாடும் வாய்ப்பளிக்கிறார். அவரும் அதனை உணர்ந்து, உருகி, உணர்ச்சிப் பெருக்கோடு உயிரக் கரைய விட்டிருக்கிறார். இதே மெட்டில் அமைந்த " ஒரு காற்றில்" என்ற பாடலை ராஜா குரலில் நாள் முழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இப்பாடலின் மூலம், மற்ற 'Coco Cola' இசையமைப்பாளர்களிடம் இருந்து வேறுபட்டு தான் அமிர்தமாய் இசைவிருந்து படைப்பவன் என்கிறார் ராஜா.
ராஜாவின் படைப்புகளில் பலருக்குத் தெரியாத ஒரு பொக்கிஷம் 'ரமண மாலை". ரமண மகரிஷி மேல் கொண்ட பக்தியில் ராஜா தொடுத்த 'ரமண மாலை'யில் இடம்பெற்ற "பிச்சைப் பாத்திரம்" பாடலை மது பாலக்கிருஷ்ணன் இங்கு பாடியுள்ளார். ராஜாவின் தமிழ்மொழிப்புலமையை கட்டியம் கூறும் ஆழமான பாடல் வரிகள் கொண்ட இப்பாடலில், வரிகளில் சிறிய மாற்றத்தையும், பாடல் இசைக்கோர்வையில் பல மாற்றங்களையும் செய்துள்ளார் ராஜா. இப்பாடலை அமைதியான சூழலில் கண் மூடிக்கேட்டு கண்ணீர் விடாதோர் மண்ணில் பிறந்ததற்கு பதில் Marsஇல் பிறந்திருக்கலாம்.
இப்பாடல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தார் போல உள்ளது நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றும், சுண்டி இழுக்கும் மிரட்டல் பாடலான "ஓம் சிவோஹம் " என்ற சமஸ்கிருத பாடல். விஜய் ப்ரகாஷின் அற்புதமான உச்சரிப்பில், உடுக்கை ஒலி மனதை அறையும் இப்பாடல் தமிழுக்கு மிகப்புதுசு.
இளையராஜாவை விட்டால் வேறு எந்த கொம்பனாலும் இப்படி ஒரு இசையை அளிக்க முடியாது என்று மிகுந்த கர்வத்தோடு சொல்லிக் கொள்ளலாம்.
Click here to listen to the songs online.
Keywords: Naan Kadavul, Music Review, Ilaiyaraja, Bala, Arya
Related Posts: